search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆதரவாளர்கள் மோதல்"

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இன்று மாநில தலைவர் திருநாவுக்கரசர் - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டது. #Congress #Thirunavukkarasar #EVKSElangovan
    சென்னை:

    எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முக்கிய ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் இன்று நடைபெற்றது.



    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமை தாங்கிய இந்த  கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தமிழக பொறுப்பாளர்கள் சென்னா ரெட்டி, சஞ்சய்தத் ஆகியோர் பங்கேற்றனர். தமிழ்நாடு காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் மற்றும் அக்கட்சியின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

    பாராளுமன்ற தேர்தல் பிரசாரம், மாவட்ட வாரியாக பூத் கமிட்டி அமைப்பது, ரபேல் போர் விமான ஊழல் விவகாரம் ஆகியவை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    இதற்கிடையில், பிற்பகல் சுமார் 2 மணியளவில் அங்கு திரண்டிருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆதரவாளர்கள் தங்களையும் மேடையில் பேச அனுமதிக்க வேண்டும் என கேட்டு கொண்டனர். இதற்கு திருநாவுக்கரசு ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால், இருதரப்பினரும் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, கைகலப்பு உருவாகும் சூழல் நிலவியதால் மேடையில் இருந்து இறங்கிவந்த திருநாவுக்கரசர் அவர்களை சமாதானப்படுத்த முயற்சித்தார்.

    காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடந்த இந்த மோதல் சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #Congress #Thirunavukkarasar #EVKSElangovan #SathyamurthyBhavan
    தண்டையார்பேட்டையில் மதுசூதனன்-தினகரன் ஆதரவாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக தினகரன் ஆதரவாளர்கள் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #Madhusudhanan #TTVDhinakaran
    ராயபுரம்:

    ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. தினகரன் நேற்று முன்தினம் தண்டையார்பேட்டை இரட்டை குழி தெருவில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்துக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வந்தார்.

    அப்போது மதுசூதனன் ஆதரவாளர்கள் என அ.தி.மு.க. தொண்டர்கள் 20 ரூபாய் நோட்டுகளை காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் தினகரன் ஆதரவாளர்களுக்கும், மதுசூதனன் ஆதரவாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் கல்வீசி தாக்குதல் நடத்தினார்கள். பாட்டில்கள் மற்றும் செருப்புகளும் வீசப்பட்டன.

    இந்த மோதலில் மதுசூதனன் ஆதரவாளர்கள் 3 பேர் காயமடைந்தனர். அவர்கள் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். தினகரன் ஆதரவாளர்கள் 8 பேர் காயமடைந்து சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    கல்வீச்சில் காயம் அடைந்த பெண் இன்ஸ்பெக்டர் பிரேமா தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் தொடர்பாக தண்டையார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினார்கள். சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் இருக்கும் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து மோதலில் ஈடுபட்டவர்களை தேடி வருகிறார்கள்.

    இது தொடர்பாக தினகரன் ஆதரவாளர்கள் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அத்துமீறி பொது இடத்தில் கூடுவது, கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுதல், தகாத வார்த்தைகளால் பேசுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #Madhusudhanan #TTVDhinakaran
    கோவையில் வருகிற 21-ந்தேதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
    கோவை:

    கோவையில் அ.தி.மு.க.வினர் மற்றும் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

    இது குறித்து தினகரன் அணி அமைப்பு செயலாளரும், கோவை தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சேலஞ்சர் துரை கூறியதாவது:-

    எங்கள் கட்சியின் பகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வடவள்ளி பகுதி செயலாளர் கருப்பசாமி வீட்டில் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பின்னர் நாங்கள் அமைதியான முறையில் வந்து கொண்டிருந்தோம். அப்போது அ.தி.மு.க.வினர் எங்கள் காரை வழி மறித்து  தாக்குதல் நடத்தினார்கள். நிறைய கார்கள் தாக்கப்பட்டது.
    இதனை கண்டித்து நாங்கள் சாலை மறியலில் ஈடுபட்டோம். எங்களை கைது செய்து உள்ளனர். எங்கள் காரை உடைத்தவர்களை போலீசார் கைது செய்யாமல் எங்களை கைது செய்து இருப்பது கண்டிக்கத் தக்கது.

    அ.திமு.க.வினர் அவர்களாகவே தங்கள் காரை உடைத்து விட்டு நாங்கள் உடைத்ததாக  கூறி உள்ளனர். இதில் எங்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    எங்கள் கட்சி நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து வருகிற 21-ந் தேதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமையில் கோவையில் போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளோம். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கோவையில் அ.தி.மு.க.வினர் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மோதி கொண்டனர். இது தொடர்பாக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உள்பட 60 பேர் கைது செய்யப்பட்டனர். #ADMK #TTVDhinakaran
    வடவள்ளி:

    கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

    உக்கடம், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தொண்டாமுத்தூர் லட்சுமி நகரில் உள்ள வடவள்ளி பகுதி செயலாளர் கருப்பசாமி வீட்டில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. கூட்டம் முடிந்த பின்னர் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கோவை மாநகர தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சேலஞ்சர் துரை,புறநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ரோகிணி, அமைப்பு செயலாளர் கே.ஜி. சண்முகம், மகளிரணி செயலாளர் அன்னம்மாள் உள்ளிட்ட நிர்வாகிகள் 20-க்கும் மேற்பட்ட கார்களில் வடவள்ளி வந்து கொண்டிருந்தனர்.

    வடவள்ளி மகாராணி அவென்யூ சாலையில் 100-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் திரண்டு இருந்தனர். அவர்கள் கார்களை வழி மறித்தனர்.

    திடீரென தினகரன் ஆதரவாளர்கள் கார்கள் மீது சரமாரியாக கற்களை வீசினார்கள். மேலும் 10-க்கும் மேற்பட்ட கார்களின் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் கலவரம் போல் காணப்பட்டது. இரு தரப்பினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.

    கல் வீச்சில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் 8 பேர் மற்றும் கார் டிரைவர் ஒருவர் என 9 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் வடவள்ளி ரமேஷ் குமார், ஜெரால்டு, அரி, நிலவேந்தன், தாமோதரன் ஆகியோர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


    கார்கள் உடைக்கப்பட்டதை தொடர்ந்து மருதமலை ரோட்டில் உள்ள கருப்பராயன் கோவில் அருகே முன்னாள் எம்.எல்.ஏ. சேலஞ்சர் துரை தலைமையில் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    உடைக்கப்பட்ட கார்களை நடுரோட்டில் நிறுத்தி மறியல் செய்தனர். இரவு 9 மணிக்கு தொடங்கிய மறியல் நள்ளிரவு 12 மணி வரை நீடித்தது.

    சம்பவ இடத்துக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அனிதா, டி.எஸ்.பி.க்கள் வேல்முருகன், மணி, சண்முகய்யா மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.

    அவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் மறியலில் ஈடுபட்டவர்கள் வாகனத்தை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை கலைந்து செல்ல மாட்டோம் என தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். முதலில் ரோட்டின் ஒரு பக்கம் மட்டும் மறியல் செய்தனர். பின்னர் இரு பக்கமும் ரோட்டில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள்.

    இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சேலஞ்சர் துரை, ரோகிணி மற்றும் 6 பெண்கள் உள்பட 60 பேர் கைது செய்யப்பட்டனர்.

    அவர்களை கொளத்துப்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். இன்று காலை வரை அவர்கள் விடுவிக்கப்படவில்லை. இதனால் பதட்டம் நிலவி வருகிறது. கைது செய்யப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள திருமண மண்டபம் முன் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    அ.தி.மு.க.- டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் மோதி கொண்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து கோவை அவினாசி ரோட்டில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலை, அ.தி.மு.க. மாவட்ட தலைமை அலுவலகம், தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகம், ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகம் ஆகியவற்றுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.  #ADMK #TTVDhinakaran
    ×